அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இபிஎஸ் – ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பும் தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்து வருகின்றனர். இந்த நேரத்தில் அதிமுகவின் சட்டவிதிகள் என்ன சொல்கிறது ? அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட திருத்தங்கள் என்னென்ன என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.
1. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2. விதி எண் 20 (அ)ன் படி பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.
3. விதி எண் 19 ன் படி ஒருங்கிணைப்பாளர்கள், அவைத் தலைவர், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உட்பட மூத்த நிர்வாகிகள் அடங்கிய பொதுக் குழுவே உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.
4. விதி எண் 19 (பிரிவு 7) -ன் படி ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது அதற்கு மேற்பட்டோ பொதுக்குழுவை கூட்டலாம். ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வலியுறுத்தினால் 30 நாட்களுக்குள் பொதுக்குழு கண்டிப்பாக கூட்டப்பட வேண்டும்.
5. விதி எண் 20 – ன் படி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவே நிரந்தர பொதுச் செயலாளர் என்பதால், அவர் வகித்த பொறுப்பிற்கு இனி யாரும் தேர்ந்தெடுக்கவோ, நியமிக்கப்படவோ மாட்டார்கள்.
6. விதி எண் 30 ( பிரிவு 5 ) இன் படி உட்கட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தொடர்ந்து 5 ஆண்டுகளாக உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும் என்பது அதிமுகவின் சட்டவிதி.
7. அதிமுகவின் அவைத்தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி தேர்ந்தெடுப்பார்கள். பொதுக் குழுவை கூட்ட அவைத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.
8. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் தேந்தெடுக்கும் முறையில் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
9. ஒருங்கிணைப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களாக தேந்தெடுக்கப்படுவார்கள் என்ற விதி 20 (அ) பிரிவு 2 ல் திருத்தம் மேற்கொண்டு ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் ஒற்றை வாக்கில் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள் என மாற்றப்பட்டது.
10. கட்சியின் சட்டவிதிகளை மாற்றவும் திருத்தவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என்ற சட்டவிதி 43 ஐ திருத்தி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கோ, தளர்த்துவதற்கோ உரியத்தல்ல என மாற்றப்பட்டது.