சென்னையில் வி.பி.சிங்குக்கு சிலையுடன் மணிமண்டபம்-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையில் வி.பி.சிங்குக்கு சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் சமூக நீதி வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவரான சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின்…

சென்னையில் வி.பி.சிங்குக்கு சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் சமூக நீதி வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவரான சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 92ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாமானிய மக்களுக்கு சமூக நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக எதையும் இழப்பேன் என்று முழங்கிய வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாளில் அவரது சமூகநீதி சாதனைகளை நினைவு கூர்வதிலும், அவரைப் போற்றுவதிலும் பெருமை கொள்கிறேன்.

இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான
நடவடிக்கைகள் 1950-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடனேயே தொடங்கப்பட வேண்டும் என்பதுதான் அம்பேத்கரின் விருப்பம். ஆனால், தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது. 1990-ஆவது ஆண்டில்தான் வி.பி.சிங் மட்டும் இல்லையென்றால் அதுவும் கூட சாத்தியமாகியிருக்காது. சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் அரசியல் துணிச்சலும், சமூக நீதியில் கொண்டிருந்த அக்கறையும்தான் இடஒதுக்கீட்டை சாத்தியமாக்கின.

இந்தியாவின் சமூகநீதிச் சூழல் இன்றும் கூட செழுமையானதாக இல்லை. 30
ஆண்டுகளுக்கு முன் சமூக நீதி குறித்து தேசிய அளவில் பேசுவதே பாவமாக
கருதப்பட்டது. தென் மாநிலங்கள் சமூகநீதிக்கு சாதகமானவையாக திகழ்ந்தன என்றால், வட மாநிலங்களில் நிலைமை அதற்கு நேர் எதிராக இருந்தது. வட மாநிலங்களில் தேர்தல் வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பவர்கள் உயர்வகுப்பினராகத் தான் இருந்தனர். அவர்கள் கைகாட்டுபவர்களுக்கு வாக்களிக்கும் அவல நிலையில் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அதனால் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த காகா கலேல்கர் ஆணையத்தின் அறிக்கை நிராகரிக்கப்பட்டது.

மண்டல் ஆணைய அறிக்கை 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இத்தனை தடைகளையும் தகர்த்து மண்டல் ஆணையத்தின் பரிந்துரையின் ஒரு பகுதியை ஏற்று மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கியதால் தான், இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் வி.பி.சிங் இணையற்ற தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்ததுடன் வி.பி. சிங் ஓய்ந்துவிடவில்லை. அது செயல்படுத்தப்படுவதற்காகவும் போராடினார். 27% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் அதை நரசிம்மராவ் அரசு செயல்படுத்த தாமதித்ததால், இட ஒதுக்கீடு செயலாக்கப்படும் வரை தில்லிக்குள் நுழைய மாட்டேன் என்று கூறி தலைநகரைவிட்டு வி.பி.சிங்
வெளியேறினார். அவரது இந்த போராட்டத்தால் அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக 27% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. வி.பி.சிங் மட்டும் 27% இட ஒதுக்கீட்டை
நடைமுறைப் படுத்தாமல் இருந்திருந்தால், உயர்வகுப்பு மக்களின் முழுமையான
ஆதரவுடன் அடுத்து வந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பிரதமராக
தொடர்ந்திருக்கலாம். ஆனால், ஆட்சிக் கணக்கைப் போடாமல், சமூகநீதிக் கணக்கை
போட்டதால்தான் அவர் சமூகநீதிக் காவலராக போற்றப்படுகிறார்.

சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காகப் போராடிய வி.பி.சிங் அவர்களின் வரலாற்றை
இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அதற்கு வசதியாக அவரது வரலாறு தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பாடமாக சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் சென்னையில் வி.பி.சிங் அவர்களுக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய பிரமாண்ட மணிமண்டபமும் அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.