நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் வாங்கிய மனுக்களை திமுக தலைவர் ஸ்டாலின் என்ன செய்தார் என முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தமிழக அரசு மீது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேண்டுமென்றே அவதூறு பரப்புவதாக அவர் குற்றம்சாட்டினார். 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது வாங்கிய மனுக்களை, ஸ்டாலின் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பிய முதல்வர் பழனிசாமி, இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, திமுக ஆட்சி தான் என விமர்சித்தார். அதிமுக ஆட்சியில் மக்கள் தான் முதலமைச்சர், என்றும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.

மேலும், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பதிவு செய்யப்பட்ட, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக, முதல்வர் அறிவித்தார். சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட, வன்முறை மற்றும் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆகிய வழக்குகளை தவிர, சுமார் 1,500 வழக்குகள் கைவிடப்படும் என்று அவர் அறிவித்தார். மேலும், கூடங்குளம் போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.







