பாஜகவின் வாக்குறுதி என்ன ஆனது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை நேற்று மத்திய அரசு குறைத்தது. அது இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக தேர்தல் வாக்குறுதியாக சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாக கூறி இருந்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும், இன்னும் 72 மணி நேரத்திற்குள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத பட்சத்தில், தலைமைச் செயலகத்தில் முற்றுகை போராட்டம் பாஜக மூலம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக கரூரில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், “சிலிண்டருக்கு ஏற்கனவே மத்திய அரசு கொடுத்து வந்த மானியத்தை முழுமையாக கொடுக்கவில்லை. பிரதமர் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. தேர்தலுக்கு முன் வெளி நாட்டில் இருக்கக்கூடிய கருப்பு பணத்தை மீட்டு பொதுமக்கள் வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார்.
பெட்ரோல், டீசல் விலை காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட, பாஜக ஆட்சியில் அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் தேவையில்லாமல் மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை. இவற்றையெல்லாம் முழுமையாக குறைக்காமல், மத்திய அரசு ஏற்றி வைத்துள்ள விலையை, மாநில அரசுகளுக்கு வரக்கூடிய வருவாயை இழந்து விலையை குறைக்க வேண்டும் என்று சொல்வது, தேவையற்ற வாதம். மேலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயராது” என்று தெரிவித்தார்.








