மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். கதாநாயகனின் புகழ்பாடிய திரைப்படங்களின் மத்தியில், மனித உறவுகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்னைகள் ஆகியவற்றை பேசிய திரைப்படங்களை இயக்கினார்.. 1965ம் ஆண்டு வெளியான, நாகேஷ் கதாநாயகனாக நடித்த நீர்க்குமிழி கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த முதல் திரைப்படமாகும்.
பாலச்சந்தரின் மெழுகுவர்த்தி என்ற நாடகத்தை கண்டு ரசித்த எம்ஜிஆர், பாலச்சந்தரை போன்ற இளைஞர்கள் திரையுலகுக்கு வரவேண்டும் எனக் கூறியதோடு தெய்வத்தாய் என்ற தனது திரைப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பையும் தந்தார். நாடக பாணி வசனங்களை திரையுலகுக்கு ஏற்றவாறு எழுத எம்ஜிஆர் பயிற்சியளித்ததாக குறிப்பிடுகிறார் பாலச்சந்தர். 1964 ஆவது ஆண்டில் வெளியான தெய்வத்தாய் திரைப்பட பாடல்கள் ஹிட்டாக படமும் வெற்றி பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிவாஜி நடிக்க எதிரொலி என்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற பாலச்சந்தர், சூரக்கோட்டைக்கு சென்று, கதையை கூறினார். படப்பிடிப்பின்போது தனது நடிப்புக்கு ஏற்றவாறு காட்சிகள் இடம்பெறும்படி சிவாஜி கூற, பாலச்சந்தர் மழுப்பிட… புரிந்து கொண்டார் சிவாஜி…. சிவாஜியின் எதிர்மறை நடிப்பை மக்கள் ஏற்காததால் படம் வெற்றி பெறவில்லை…
பாலச்சந்தர் கதை வசனம் எழுதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சர்வர் சுந்தரம் திரைப்படத்திற்காக, கடைசியாக படமாக்கப்பட்ட “அவளுக்கென்ன பாடல் ஹிட்’ அடித்தது.
அந்தக்கால வழக்கப்படி சின்னஞ்சிறு வயதில் மணமுடிக்கப்பட்ட தனது சகோதரி மங்களம், சில மாதங்களில் கணவரை இழக்க, கைம்பெண்ணாக சகோதரி பட்ட பாடுகளை மனதில்கொண்டே புரட்சி மற்றும் சீர்திருத்த கருத்துகளை காட்சிகளாக அமைத்ததாக குறிப்பிட்டார் பாலச்சந்தர்.
தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தில் நிர்வாக சீர்கேடுகளை விமர்சிக்கும் காட்சிகள், உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் சமூக அவலங்களை சுட்டிக்காட்டும் சாட்டையடி வசனங்கள் என நிலைத்து நிற்கிறார் பாலச்சந்தர்..