சென்னையில் களைகட்டிய கலைத் திருவிழா – ஆர்வமுடன் பங்கேற்கும் மாணவ, மாணவிகள்

சென்னையில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தொடங்கி வைத்த நிலையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில்…

சென்னையில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தொடங்கி வைத்த நிலையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவர்களின் கலைதிறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழா நடைபெற்றது.

6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான இந்த நிகழ்ச்சியில், நடனம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், நுண்கலை வேலைப்பாடு, நாடகம் என 208 போட்டிகள் நடைபெற்றன. இதில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். வெற்றி பெறும் மாணவ, மாணவியர், மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இந்த கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ஆட்சியர் அமிர்த ஜோதி, இன்றைய மாணவ மாணவிகளே நாட்டின் வருங்கால சொத்து என்றும், மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் திறமையை கண்டறிய வேண்டும் எனவும் கூறினார்.

கலைத் திருவிழா மூலம் பல்வேறு வகையில் தங்களின் திறன்களை வளர்த்து கொள்ள முடிகிறது என்று பள்ளி மாணவ, மாணவிகள் கூறினர். பள்ளிக்கல்வித்துறை இந்த வாய்ப்பை அளித்ததற்கு நன்றி என்றும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் சினேகா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் மாநில திட்ட இயக்குனர் ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.