“இது போன்ற பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்” – இபிஎஸ் கண்டனம்!

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி, ரவி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரக்கோணம் எம்ஆர்எப் தொழிற்சாலை முன்பாக நுழைவாயில் கூட்டம் நடத்த சென்ற முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி, ரவி எம்.எல்.ஏ. மற்றும் அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இபிஎஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,

“அரக்கோணம் MRF அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை விளக்கவும், மே தின தொழிலாளர்கள் நல்வாழ்த்துகளைக் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வருகை தந்த ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கட்சி செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு. ரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான  கோ. அரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை திமுக அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் கட்சியினர் அல்ல. எத்தனை அடக்குமுறைகளை திமுக அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்”

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.