“மருது சகோதரர்கள் நினைவை என்றும் போற்றுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர்நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மருது சகோதரர்களின் 224வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் சிவகங்கையில் உள்ள மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் மருது சகோதரர்களின் 224வது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சிவகங்கைச் சீமையின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக இம்மண்ணில் நிலைத்திருக்கும் மருது சகோதரர்கள் நினைவு நாள்.

ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடும் உணர்வை அந்நாளிலேயே விதைத்து, தலைசிறந்த தியாகிகளாகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மருதிருவரின் நினைவை என்றும் போற்றுவோம்! இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர்நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.