பசி இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று ஈஷா அறக் கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
ஈஷா அறக்கட்டளை சார்பில் 75- ம் ஆண்டு சுதந்திர தின விழா, ஆதியோகி சிலை முன்பு இன்று நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஈஷா ஹத யோகா பள்ளியில் ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டு வரும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த தன்னார்வலர்கள் யோகா செய்தனர். இந்நிலையில், நமது பொறுப்பான செயல்கள் மூலம் அடுத்த 26 ஆண்டுகளில் பசி இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: சுதந்திர தினம் என்பது மிக முக்கியமான நாளாகும். கடந்த 74 ஆண்டுகளில் பொருளாதாரம், தொழில்நுட்பம், விஞ்ஞானம், கலை, விளையாட்டு என பல துறைகளிலும் நாம் பல முன்னேற்ற படிகளை எடுத்துள்ளோம். இருப்பினும், நம் நாட்டில் இன்னும் நிறைய பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் உள்ளன.
தற்போது, கொரோனா நமக்கான மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த சவாலை வெற்றிகரமாக கடந்து வர மருத்துவ விஞ்ஞானிகளின் ஆலோசனைப்படி, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, தடுப்பூசி போடுவது போன்ற பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மக்கள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து பொறுப்புடன் நடந்து கொண்டால் நாம் இந்த சவாலை விரைவில் கடந்து வர முடியும்.
இதுதவிர, நம் நாட்டில் மண்வளம் குன்றி வருவது முக்கிய பிரச்சனையாக உள்ளது. நம் உடல் மண்ணில் இருந்து உருவாகியுள்ளது. மண்ணின் வளம் குன்றினால் உடலின் நலமும் குன்றும். ஆகவே, மண்ணை எப்போதும் சத்துமிக்கதாக வைத்து கொள்ள வேண்டியது மிக அவசியம். வளமான மண்ணும் தேவையான நீரும் அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும். இந்த 75-வது சுதந்திர தின நாளில் நம் நாட்டை நலமான, வளமான நாடாக உருவாக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.









