கேரள மாநிலம் வயநாடு அருகே மயக்கி ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட தண்ணீர் கொம்பன் காட்டு யானை உயிரிழந்த நிலையில், விசாரணை நடத்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியில் இரு வாரங்களுக்கு முன் தொடர்ந்து விளை
நிலங்களை நாசம் செய்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு மீண்டும் பந்திப்பூர் வன பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 5 மணிக்கு அந்த யானை மீண்டும் வயநாடு பகுதிக்கு வந்துள்ளது.
வயநாடு அருகே மனந்தவாடி இடவகம் பகுதியில், குடியிருப்பு நிறைந்த நகர பகுதியில் நுழைந்த காட்டு யானை தண்ணீர் கொம்பன், நகர பகுதி மற்றும் விளை நிலங்கள் என மாறி மாறி சென்று போக்கு காட்டி வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர். கும்கி யானைகளான சுரேந்திரன், சூர்யா மற்றும் விக்ரம் யானைகளை கொண்டு 18 மணி நேர போராட்டத்திற்கு பின் மீண்டும் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வன சரகத்திற்க்குட்பட்ட ராமபுரம் யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பராமரிக்கப்பட்டு வந்த தண்ணீர் கொம்பன் இன்று சரிந்து விழுந்து உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து இது குறித்து தனி குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







