வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்படுமா என்பது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மையங்களை கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் கட்சிகளின் முகவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தேதியை தள்ளிவைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இன்று மாலை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், மற்றும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை உள்ளது. வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் ஏஜெண்டுகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமா ? வேண்டாமா ? என்பது பரிசீலனையில் உள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசி வருகிறோம் என்று கூறினார்.
கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது எனவும், மே 2ஆம் தேதி சூழல் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து கருத்தை கேட்டறிந்ததாகவும் குறிப்பிட்ட அவர், வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகளுக்கு தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு மேஜை அமைக்கும் பணி கொரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப மாற வாய்ப்புள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் இடவசதி இருந்தால் அது பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், “வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களின் இடவசதி குறித்து தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொரோனா பரவல், மற்றும் சூழல் மாறுபடுகிறது. அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டபின் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி குறிப்பிட்ட அளவு வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றும் விவரித்தார் சத்ய பிரதா சாஹு.







