உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, வி.கே. சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது.
அதன்படி, மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து
வரப்படுகின்றனர்.
அந்த வகையில், இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். உக்ரைனின் எல்லைப் பகுதியில் தஞ்சமடைந்துள்ள மாணவர்கள் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மீட்கப்படுகின்றனர். இந்நிலையில், உக்ரைன் மாணவர்களின் கல்வி குறித்து வி.கே.சசிகலா பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் அனைவருக்கும், அவர்களின் கல்வி தடை படாமல், அவரவர் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் கல்வியை தொடரும் வகையில் உரிய நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
நீட் தேர்வு நடைமுறை காரணமாக, இங்கு மருத்துவ படிப்பு படிக்க முடியாதவர்களே வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் மருத்துவக் கனவை நனவாக்கிக் கொள்வதாக கூறுகின்றனர் என குறிப்பிட்டுள்ள வி.கே. சசிகலா, எனவே, இந்த தருணத்திலாவது மாணவர்களின் மருத்துவ கனவிற்கு தடையாக இருக்கும் நீட் தேர்வை விலக்கிடும் வகையில் கொள்கை முடிவை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.








