ஆவின் பொருட்கள் விலை உயர்வை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வி.கே.சசிகலா வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து, வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு ஆவின் பொருள்களுக்கு விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு நாளும் திமுக அரசு தாங்கமுடியாத சுமைகளை தமிழக மக்கள் மீது தொடர்ந்து ஏற்றக் கொண்டே இருக்கிறது. இது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. திமுக அரசு கடந்த மார்ச் மாதம்தான் நெய், பால் பவுடர், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தியிருந்தது. அதாவது, ஆவின் நெய் லிட்டருக்கு 30 ரூபாய் வரையிலும், பால் பவுடர் 1 கிலோ 40 ரூபாய், பாதாம் பால் பவுடர் கிலோ 100 ரூபாய், தயிர் லிட்டருக்கு 6 ரூபாய் என்ற அளவுக்கு கடுமையாக விலை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், நெய் தற்போது லிட்டருக்கு 45 ரூபாய், தயிர் லிட்டருக்கு 10 முதல் 20 ரூபாய் வரையிலும், லஸ்ஸி 200 மி.லி. 2 முதல் 3 ரூபாய் வரையிலு் மீண்டும் உயர்த்தியிருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்திருப்பதை காரணமாக காட்டி, திமுக அரசு அதைவிட அதிகமாக 8.5 சதவீதம் அளவுக்கு ஆவினில் நெய்யின் விலையை உயர்த்தியிருப்பது பகல் கொள்ளையாகத் தெரிகிறது.
திமுக அரசு இதுபோன்று மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஆவின் பொருட்களிந் விற்பனை விலையை உயர்த்தி வந்தால், ஆவின் நிறுவனத்தை மக்கள் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளால் தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், அவர்களின் விற்பனையை அதிகரிக்கவும் தமிழக அரசே உதவுவதாக அமைந்துவிடும். இதற்காகவா தமிழக மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டார்கள் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுகிறது. அதேபோல, மத்திய அரசும் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








