தேஜாவு படம் எப்படி இருக்கு – விமர்சனம்

4 பேர் இணைந்து ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். அதில் மூன்று பேர் காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்படுகின்றனர். ஒருவர் தப்பிக்க வைக்கப்படுகிறார். அந்த நான்காம் நபர் யார். அவரை தப்பிக்க வைக்க…

4 பேர் இணைந்து ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். அதில் மூன்று பேர் காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்படுகின்றனர். ஒருவர் தப்பிக்க வைக்கப்படுகிறார். அந்த நான்காம் நபர் யார். அவரை தப்பிக்க வைக்க காவல்துறை செய்தது என்ன அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்ன என்பது தான் தேஜாவு படத்தின் கதை.

 

அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி, மது பாலா, அச்யுத் குமார் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கிரைம் த்ரில்லரை மையமாக கொண்டு விறுவிறுப்பாக கதை நகர்கிறது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில் அருள்நிதி முக்கியமானவர். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தேஜாவு திரைப்படமும் வித்தியாசமான கோணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரியாக அருள்நிதி இந்த படத்தில் நடித்துள்ளார்.

 

தேஜாவு என்ற தலைப்புக்கான அர்த்தம் ஏற்கனவே நடந்தது என்பதே. இதை மையமாக வைத்தே இந்த படம் உருவாகியுள்ளது. எழுத்தாளர் ஒருவர் ஒரு பெண் கடத்தப்படுவது போன்ற ஒரு கதையை எழுதுவார். அவர் எழுதும் அனைத்தும் அப்படியே நிஜத்தில் நடக்கும். அந்த கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்ற காவல்துறை அதிகாரியான அருள்நிதி முயற்சி செய்வார். இப்படி நிஜம் எது கற்பனை எது, எப்படி அவர் எழுதுவது நிஜத்தில் நடக்கிறது, அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்றுள்ளார் அறிமுக இயக்குனர் அரவிந்த்.

 

எழுத்தாளராக நடித்துள்ள அச்யுத் குமார் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றுள்ளார். அவருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ள எம் எஸ் பாஸ்கரின் குரல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காவல்துறை உயர் அதிகாரியாக வரும் மது பாலா தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். இறுதிவரை ஒரு விறைப்பான காவல்துறை அதிகாரியாக நடிக்க முயற்சி செய்துள்ளார்.

 

எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் அருள்நிதி இந்த படத்திலும் அதை நிரூபித்துள்ளார். பிட்டான உடலுடன் கம்பீரமான தோற்றத்துடன் ஒரு நிஜ காவல்துறை அதிகாரியை போலவே தன்னை நிரூபிக்க முயற்சி செய்துள்ளார். தன்னுடைய தனித்துவமான நடிப்பால் இறுதிவரை தேஜாவு படத்தை சுமந்து சென்றுள்ளார் அருள்நிதி.

படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக இருந்தாலும் இரண்டாம் பாதி சற்று மெதுவாகவே நகர்கிறது. அதிலும் சில காட்சிகள் சற்று சலிப்பையே ஏற்படுத்துகிறது. முதல் பாதி கதையை போலவே இரண்டாம் பாதி கதையையும் சற்று விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் அதே நேரத்தில் முதல் படத்திலேயே இப்படி ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ள இயக்குனர் அரவிந்த் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.

 

கிரைம் த்ரில்லரை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகி இருந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருக்கும். அப்படி வித்தியாசமான கதைகளை ரசிக்கும் ரசிகர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படமாக தேஜாவு இருக்கும். அதே நேரத்தில் அருள்நிதியின் சினிமா பயணத்தில் தேஜாவு திரைப்படம் நிச்சயம் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 

– தினேஷ் உதய்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.