2 வருடமாக குடியிருப்புகள், விளைநிலங்களை சேதப்படுத்திய விநாயகம் காட்டு யானை -மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

இரண்டு வருட காலமாக தமிழ்நாடு, கர்நாடகா மாநில வனப்பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களைச் சேதப்படுத்திய விநாயகம் காட்டு யானையை கர்நாடக மாநில வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கடந்த 2018…

இரண்டு வருட காலமாக தமிழ்நாடு, கர்நாடகா மாநில வனப்பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களைச் சேதப்படுத்திய விநாயகம் காட்டு யானையை கர்நாடக மாநில வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் சின்னதம்பி மற்றும் விநாயகம் ஆகிய இரு காட்டு யானைகள் கிராம பகுதிகளுக்குள் நுழைந்து குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது.

இதனைத் தொடர்ந்து கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சின்னதம்பி யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, டாப்ஸ்லிப் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு கும்கி யானையாக மாற்றப்பட்டது. அதேபோல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மற்றொரு யானையான விநாயகம் காட்டு யானையை ரேடியோ காலர் பொருத்தப்பட்டு முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக விநாயகம் காட்டு யானை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பழங்குடியினர் கிராமங்களிலும், விளை நிலங்களிலும் மற்றும் கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் நுழைந்து மீண்டும் வீடுகளை சேதப்படுத்துவதும் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து அழித்தும் வந்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்த விநாயகம் யானை, தொடர்ந்து விளைநிலங்களைச் சேதப்படுத்தி வந்ததால் விநாயகம் யானையைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கைகள் வைத்து போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இதனால் கிராமப் பகுதிக்குள் நுழைந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வரும் விநாயகம் காட்டு யானையை கர்நாடகா மாநில வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அவ்வாறு பிடிக்கப்பட்ட காட்டு யானையை கர்நாடக மாநிலம் ராமபுரம் யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு கராலில் அடைக்கப்பட்டது.
மேலும், இந்த யானைக்கு கர்நாடகா மாநில வனத்துறையினர் கும்கி பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இரண்டு வருடங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த விநாயகம் யானை பிடிக்கப்பட்டதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநில வனப்பகுதிகளின் எல்லைகளில் அமைந்துள்ள கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.