அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு திமுகவில் மீண்டும் பதவி!

மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சமீபத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஸ்தான்…

மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சமீபத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஸ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு,  அவருக்கு பதிலாக திண்டிவனம் ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த  சேகர் என்பவர் அப்பதவியில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத் தேர்தலில்,  விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் ப.சேகர் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காரணத்தால் விழுப்புரம் வடக்கு மாவட்டம் மாவட்ட அவைத் தலைவர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி,  இப்பொறுப்புக்கு போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து 2024, ஜூன் 17 (திங்கட்கிழமை) அன்று ரூ.25000/வீதம் தலைமைக் கழகத்தில் அளித்து இரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி விழுப்புரம் வடக்கு மாவட்டம், மாவட்ட அவைத்தலைவர் பொறுப்புக்கு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த காரணத்தால்,  அவரது மனு ஏற்கப்பட்டு,  விழுப்புரம் வடக்கு மாவட்டம், மாவட்ட அவைத்தலைவராக, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.