கிராம ஊராட்சி அலுவலக வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த தெற்குதிட்டை ஊராட்சி மன்றத் தலைவரான பட்டியலினத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமரவைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அவர் தரையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமும் வைரலானது. இதனைத் தொடர்ந்து பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்கள் பலரும் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில் வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், “பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் இருக்கையில் அமரும் உரிமை மறுப்பு, கொலை மிரட்டல் போன்ற சாதி ரீதியிலான குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும். ஊராட்சி மன்ற அலுவலக வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 4 வாரங்களில் இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.







