கஞ்சா கடத்தல் வழக்கு: கேரளாவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது!

கோவையில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற அம்மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக – கேரளா எல்லையான கோவை மாவட்டம் வேலந்தாவலம் சோதனைச் சாவடியில்…

கோவையில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற அம்மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக – கேரளா எல்லையான கோவை மாவட்டம் வேலந்தாவலம் சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒத்தக்கல் மண்டபம் பகுதியில் இருந்து பாலக்காடு நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி காவலர்கள் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஷார்புதீன் (25), ஷெரில் (20) என்பதும், மேலும் நண்பர்களான இருவரும் கோவையில் இருந்து கேரளாவிற்கு விற்பனைக்காக கஞ்சா கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 1.100 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.