தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடியில் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கின்றார்.
இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஜனவரி 3ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் இருக்கிறது.
கூட்டணி குறித்து கூறுவதற்கு நேரம் இருக்கிறது. பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்க இருக்கிறது. அதனால் உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுத்து தலைமைக் கழகத்தில் அறிவிப்பேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு எதிர்காலத்தில் எந்த கூட்டணி நல்லதோ மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள் யாரை அதிகம் விரும்புகிறார்களோ தேமுதிகவிற்கு எதிர்காலத்திற்கு எது நல்லதோ அந்த வகையில் தாயாக இருந்து கழகத்தை கட்டி காக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. இந்த கடமையை கேப்டன் என் கையில் கொடுத்து இருக்கிறார், சரியான நேரத்தில் அறிவிப்பேன்.
பிரதமர் அவருடைய கூட்டணி கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கின்றார். அவருடைய கூட்டணி சார்பாக பங்கேற்று இருக்கின்றார். அது குறித்து நான் ஒன்னும் சொல்ல முடியாது. NDA கூட்டணிக்கு வராத கட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறதா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? இது கேப்டன் கட்சி யாரும் எதுவும் பண்ண முடியாது, மிரட்ட முடியாது. தொண்டர்கள் இருக்கின்றார்கள், எந்த கட்சிக்கு எது நல்லதோ அதை அவர்கள் முடிவு எடுப்பார்கள்.
எடப்பாடி – டிடிவி தினகரன் ஒன்று சேர்ந்துள்ளார்கள் குறித்து கேள்விக்கு? நான் பதில் கூற முடியாது. அவர்கள் இருவரும் சேர்ந்துதான் சொல்ல முடியும். அதுதான் சரியாக இருக்கும். தேமுதிக மாநாடு பிரம்மாண்ட வெற்றி, ஒட்டுமொத்த மக்களின் ஆதரவோடும் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் மிகப்பெரிய உதவியாள் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த மாநாடு மதுரை மாநாட்டிற்கு இணையாக பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து மாநாடும் பெஸ்ட் தான்.
விஜய் படத்திற்கு தொடர்ந்து இடையூறுகள் கொடுத்து வருவது பாஜகவா என செய்தியாளர்கள் கேள்விக்கு? சட்டம் தன் கடமையை செய்யும். அரசியலுக்காக செய்கிறார்களா? படத்தில் ஏதேனும் இருக்கிறதா என்று உரியவரான விஜய் தான் பதில் சொல்ல வேண்டும். விஜயை அழைத்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த வேண்டும். நான் ஆவலோடு இருக்கின்றேன்.
திமுக 5 ஆண்டு காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் கருத்து இருக்கிறது. 50% நல்லதும் நடந்து இருக்கிறது. நடக்க வேண்டியதும் இருக்கின்றது. எல்லா காலத்திலும் போராட்டம் இருக்க தான் செய்கின்றது. இடைநிலை ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், செவிலியர்கள் எல்லோரின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.







