அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், பட்டா மாற்றம் செய்ய ரூ.10,000 லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர் மற்றும் இடைத்தரகர் உட்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை
சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனது பூர்விக சொத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம்
செய்ய ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலத்தை அண்மையில் அணுகியுள்ளார். அப்போது, பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் தரவேண்டும் என துணை வட்டாட்சியர் சரவணன் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்காக ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்த தனது உறவினரான சாம்பசிவம் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ், அரியலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய நோட்டுக்களை சுரேஷிடம் வழங்கியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுரேஷ் ரசாயனம் தடவிய நோட்டுக்களை இடைத்தரகர் சாம்பசிவத்திடம் வழங்கியுள்ளார். சுரேஷிடம் இருந்து சாம்பசிவம் என்பவர் பணத்தைப் பெற்று அலுவலகத்தை விட்டு வெளியே நின்று கொண்டிருந்த வீரா என்பவரிடம் கொடுத்து வைத்திருக்குமாறு கூறியுள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சந்திரசேகர் தலைமையிலான காவல்துறையினர் இடைத்தரகர் சாம்பசிவத்தை மடக்கி பிடித்தனர். இதையறிந்த வீரா அங்கிருந்து தப்பிச்சென்று தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த அவரது உறவினரிடம் பணத்தை கொடுத்து விட்டு திரும்பி வந்தார்.
இதனை அடுத்து போலீசார் சாம்பசிவத்தையும், வீராவையும் பிடித்து விசாரணை செய்ததில் இருவரும் முன்னுக்கு பின் முறனாக பதில் அளித்தனர். தீவிர விசாரணையில் பணத்தை துணை வட்டாட்சியர் சரவணனுக்கு கொடுப்பதற்காக பெற்றுக்கொண்டதாக ஒப்புக் கொண்டதால் இருவரையும் கைது செய்த போலீசார் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று மண்டல துணை வட்டாட்சியர் சரவணன் முன்பு நிறுத்தி பணம் வாங்கியது அவருக்குத்தான் என்பதை நிரூபித்தனர்.
அதன்பின்பு மூவரையும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்ததில் சுரேஷிடம் பட்டா மாற்றுவதற்காகத்தான் இந்த பணம் பெற்றுக் கொண்டதாக சரவணன் மற்றும் சாம்பசிவம் இருவரும் ஒப்புக்கொண்டதை அடுத்து போலீசார் துணை வட்டாட்சியர் சரவணன், இடைத்தரகர் சாம்பசிவம் மற்றும் அவரிடம் பணம் பெற்றுக் கொண்ட வீரா ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூபி.கா