போச்சம்பள்ளி அருகே காய்கறிகளை உணவாக உட்கொள்ளும் மீன்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, கம்புகாலப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு கம்புகாலப்பட்டி ஏரியில் போர்வெல் அமைத்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீன் பிடிப்பதற்காக ஏரி குத்தகைக்கு விடப்பட்டது. அப்போது ஊர் மக்கள் ஏரியில் வளர்க்கப்படும் மீன்களுக்கு உணவாக மீன், கோழி போன்ற இறைச்சி கழிவுகளைத் தவிர்க்க ஏரியைக் குத்தகைக்கு எடுத்த ஒப்பந்ததாரருக்குக் கோரிக்கை வைத்தனர். குடிநீர் ஏரியில் இந்தக் கழிவுகள் கலக்கப்பட்டால் மக்களுக்கு நோய்த் தொற்றுகள் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு இக்கோரிக்கை வைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை ஏற்ற ஒப்பந்ததாரர், பேரிகை, சூளகிரி போன்ற காய்கறி மார்க்கெட்டிலிருந்து பீன்ஸ், வெள்ளரி, காலிபிளவர், சுரைக்காய், குடை மிளகாய் உள்ளிட்ட பல்வேறு ரக காய்கறிகளை விலைக்கு வாங்கி வந்து மீன்களுக்கு உணவாக வழங்கி வருகிறார். மேலும் மீன் வளர்ப்பிற்காக 2 டன் அளவுக்குக் காய்கறிகளை வாங்கி இருப்பில் வைத்துள்ளார்.
காய்கறிகளை மட்டுமே உணவாக உட்கொள்ளும் மீன்கள் அசைவ பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சைவ மீன்கள் மிகவும் சுவையாக இருப்பதாகப் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.