தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நீட் தேர்வு சுமை, கேள்வித்தாள் கசிவு மற்றும் நாட்டின் கல்விச் சூழல் குறித்து NTA, NCRB (ADSI) மற்றும் CMS:E 2025 அறிக்கைகள் வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் இதோ:
- மாணவர் தற்கொலைகள் அதிகரிப்பு: 2014-ல் 8,068 ஆக இருந்த மாணவர் தற்கொலை எண்ணிக்கை 2024-ல் 14,488 ஆக அதிகரித்து, 80% உயர்வைக் கண்டுள்ளது.
- மொத்த தற்கொலைகள்: கடந்த 10 ஆண்டுகளில் (2014-2024) மட்டும் நாட்டில் 1.23 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
- தேர்வுத் தோல்வியால் உயிரழப்பு: 2014 – 2024 காலகட்டத்தில் தேர்வில் தோல்வி அடைந்த அச்சத்தால் மட்டுமே 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
- பாதிக்கப்படும் இளைஞர்கள்: தற்கொலை செய்துகொண்டவர்களில் 55% பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 42% பேர் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர்.
- நீட் தேர்வுத் தேர்ச்சி: 2015 முதல் ஆண்டுதோறும் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்தாலும், 57%-க்கும் குறைவானவர்களே (11.21 லட்சம் பேர்) தகுதி பெற முடிகிறது.
- பயிற்சி மையங்களின் ஆதிக்கம்: மேல்நிலைக் கல்வி படிக்கும் மாணவர்களில் 37% பேர் (நகர்ப்புறங்களில் 44.6%) கட்டாயமாகத் தனியார் பயிற்சி மையங்களை நாடும் அவலநிலை உள்ளது.
- பொருளாதாரச் சுமை: பெற்றோர் தங்களின் பள்ளிச் செலவில் மூன்றில் ஒரு பங்கை (மேல்நிலைக் கல்வியில் சராசரியாக ரூ.6,384) பயிற்சி மையங்களுக்கே செலவிட வேண்டியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை நசுக்கி, கோச்சிங் மாஃபியா கோடிக்கணக்கிலான கொள்ளைக்குத் துணை போகிறது இந்த பாஜக அரசு. வினாத்தாள் கசிவும், தவறான கல்விக்கொள்கையும் நமது மாணவர்களின் உயிரைப் பறிக்கும் ஆயுதங்களாக மாறியுள்ளன.
மாணவர்களின் ரத்தத்திலும், பெற்றோர்களின் கண்ணீரிலும் வியாபாரம் நடத்தும் இந்த சீரழிந்த அமைப்புக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்! 2029-ல் நமது தலைவர் ராகுல் காந்தி தலைமையில் புதிய ஆட்சி அமைந்ததும், கோச்சிங் மாஃபியாக்கள் ஒழிக்கப்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நேர்மையான கல்வி முறை கட்டாயம் உருவாக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




