திமுக அரசின் முயற்சிகளுக்கு விசிக உறுதுணையாக இருக்கும்: திருமாவளவன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் இன்று நேரில் சந்தித்தார். அயோத்திதாசப் பண்டிதர் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு நன்றி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தமிழ் சமூகத்தின் மேம்பாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களை நினைவுகூர்ந்து அவர்களைப் போற்றும் வகையில், அவர்களின் பங்களிப்பை வருங்கால தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

பெரியாரின் காலத்திற்கு முன்பே இந்த மண்ணில் தமிழ் பௌத்தம் என்ற பெயரில் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் அயோத்திதாச பண்டிதர் என்ற திருமாவளவன், விசிக நீண்ட நாட்களாக வைத்து வந்த கோரிக்கையை அங்கீகரித்து மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது என்றார்.

மேலும், திமுக அரசு சமூக நீதிக்கான அரசு என்றும், சமூகநீதி களத்தில் திமுக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் விசிக உறுதுணையாக இருக்கும் எனவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.