தவெக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல்; ஆ. ராசா கடும் விமர்சனம்…!

தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளதை திமுக எம்.பி. ஆ. ராசா விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பெரும்பான்மை இல்லாததால் அக்கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து தவெக நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயூஎம்எல் உள்ளிட கட்சிகள் ஆதரவு அளிக்க முன் வந்தன. இதனை தொடர்ந்து அக்கட்சி ஆட்சியமைத்தது.

இந்த நிலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவரும், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சியை சேர்ந்த தலா ஒருவரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

முன்னதாக நேற்று தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் இடம் பெறுவதாக அறிவித்ததை விமர்சித்து திமுக எம்.பி. ஆ. ராசா நேற்று எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அப்பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அப்பதிவை ஆ. ராசா நீக்கினார்.

ஆ. ராசாவின் பதிவிற்கு விசிக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் பாமக நிர்வாகி திலகபாமாவும் ஆ. ராசாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் திமுக எம்.பி. ஆ. ராசா வெளியிட்டுள்ள மற்றொரு எக்ஸ் பதிவில், “என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்” என்று பதிவிட்டு இருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.