பயணிகள் வேன் திருட்டு : ஒருவர் கைது

வேளாங்கண்ணியில் பயணிகள் வேன் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் மூலம் ஒருவர் கைது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த மடபுரத்தை சேர்ந்தவர் சுரேந்தர். இவர் மார்க்கோ போலோ வகை வாடகை வேன் வைத்துள்ளார். அந்த…

வேளாங்கண்ணியில் பயணிகள் வேன் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் மூலம் ஒருவர் கைது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த மடபுரத்தை சேர்ந்தவர் சுரேந்தர். இவர் மார்க்கோ போலோ வகை வாடகை வேன் வைத்துள்ளார். அந்த வேனை வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்டாண்டில் நிறுத்தி அங்கிருந்து வாடகைக்கு இயக்கி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனை காலையில் அவர் சென்று பார்த்தபோது காணவில்லை. அதிர்ச்சியடைந்த சுரேந்தர் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வேன் திருச்சி டோல்கேட்டில் சுங்கக்கட்டணம் கட்டியதற்கான குறுஞ்செய்தி சுரேந்தர் செல்போனுக்கு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் சுங்கச் சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பார்த்தபோது வேனை இருவர் அதிவேகமாக திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து திருச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனை பறிமுதல் செய்து, வேனை திருடிச் சென்ற சென்னையை சேர்த்த சுதாகரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் சுதாகர் கடந்த மார்ச் மாதம் ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற கஞ்சா வழக்கில் கைதானதும் நாகப்பட்டினத்தில் கண்டிஷன் பெயிலில் கையெழுத்திட வந்திருப்பதும் தெரிய வந்தது. மேலும் வேளாங்கண்ணியில் விடுதி எடுத்து தங்கிய நிலையில் இன்னொருவருடன் சேர்ந்து கொண்டு இந்த வேனை கடத்திச்சென்று விற்பனைக்குக் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து டீசல் இல்லாததால் வாகனத்தைத் திருச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் பறிமுதல் செய்து வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.