திருச்சி மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தால் கண்டிப்பாக அந்த ஊர்களை சேர்க்க மாட்டோம் என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய துறையின் கீழ் திருச்சி, புதுக்கோட்டை,
அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் வளர்ச்சி பணிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்போதைய வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் தமிழக நகர வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், அரசு தலைமை கொரொடா கோவை செழியன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், அப்துல் சமத், ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பின், தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெல்டாவில் உள்ள மாவட்டங்களில் என்னென்ன தேவை இருக்கிறது என்பது குறித்து முழுமையாக விவாதித்தோம். பாதுகாப்பான குடிநீர், வடிகால்கள் மற்றும் பாதாளா சாக்கடை, பூங்காக்கள் போன்றவை கடந்த ஆட்சியில் முறையாக செயல்படுத்தப் படவில்லை. பாதுகாப்பான குடிநீர், சாலை வசதிகள் வேண்டும் என்று பல மாவட்டத்தை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
காவிரி பாலம் கட்டி 48 ஆண்டுகள் ஆகிவிட்டது – எனவே புதிய பாலம் கட்ட திட்டம் உள்ளது. அதே போல் திருச்சி நகரில் express elevated wayக்கான திட்டமும் முன் மொழியப்பட்டுள்ளது. திருச்சியில் பல்வேறு இடங்களில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவெறும் பூர் சாலை, அல்லித்துறை போன்ற பல சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
திருச்சி மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தால் கண்டிப்பாக அந்த ஊர்களை சேர்க்க மாட்டோம். மேலும் இது குறித்து முதல்வரிடம் கோரிக்கையை முன்வைப்போம். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.