பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து, ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை தொண்டர்களால் ஒற்றை வாக்கு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர்களின் பதவி 5 ஆண்டுகாலப் பதவி. அதை பொதுக்குழுவால் நீக்க முடியாது. நேற்று நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பன்னீர்செல்வத்தை கட்டுப்படுத்தாது. அதை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும், தற்பொழுதும் பன்னீர்செல்வம் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் , பொருளாளராக இருக்கின்றார் என்றும் கூறி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் ஓபிஎஸ். ஜெயலலிதாவுக்குப் பிறகு பொதுச் செயலாளர் பதவியே கிடையாது என்பதால் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தன்னை முதலமைச்சர் ஆகிய சசிகலா அம்மாவுக்கு துரோகம் செய்ததைப் போன்று நான்காண்டு காலம் தனக்கு உறுதுணையாக இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் கட்சி அலுவலகம் சென்றபோது எடப்பாடி ஆதரவாளர்கள் கல், கம்புகளை வீசினர். ரவுடிகளை 5 நாளாக அங்கு தங்க வைத்திருந்து அட்டூழியம் செய்தனர். எனவே, எங்களை குறை சொல்ல அவர்களுக்குத் தகுதியில்லை என்றார்.
-ம.பவித்ரா