தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வைகோ கோரிக்கை!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

மதிமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து மூன்று கோரிக்கைகள் வைத்தார். அவை வருமாறு:-

மூன்று கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேரடியாக எடுத்துரைப்பதற்காக இன்று நான் அவர்களைச் சந்தித்தேன்.

1. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பெயரால் ஒரு பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும். அதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

2. வறுமைக் கோட்டுக்கு உள்ளே உள்ளவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் கொடுப்பதைத் தடுப்பதற்காக ஒன்றிய அரசு வஞ்சகமாக எடுக்கின்ற பல நடவடிக்கைகளுக்கு எப்படியோ ஒரு வகையில் உச்சநீதிமன்றமும் உடன்பட்டுப் போகின்ற சூழலில், சூரிய ஒளி மின்சாரம் மூலமாக வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதற்கு அரசு முடிவெடுத்துவிட்டால், இதை தடுக்கின்ற முயற்சிகளிலிருந்து நாம் விடுபட்டு விடலாம் என்பதை தேர்தல் அறிக்கையில் சேர்ப்பது சாலச் சிறந்ததாக இருக்கும். அதையும் தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதற்கு கோரிக்கையாக முதல்வர் அவர்களிடம் வழங்கினேன்.

இந்த இரண்டு கோரிக்கைகளையும் தேர்தல் அறிக்கை தயாரிக்கின்ற குழுவிடம் உடனே தெரிவிப்பதாக முதல்வர் கூறினார்.

மிக முக்கியமான மற்றொரு பிரச்சினை, பாஞ்சாலங்குறிச்சியில் வேந்தராக இருந்து, கயத்தாறில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் முன்னோர்கள் 500 ஆண்டுகளுக்கு மேலாக அறுபடை வீடுகளில் ஒன்றாகிய திருச்செந்தூரில் கட்டபொம்மன் சத்திரம் அமைத்து, முருகன் கோயிலின் 9ஆவது மண்டகப்படியாக பயன்படுத்தி வந்தார்கள். அதில் நேரடி வாரிசு வீமராஜா (எ) ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை. அவர் தமிழ்நாடு அரசிடமிருந்து உதவித் தொகை பெற்று வருகிறார்.

எனக்கு மிக மிக வேண்டியவர். அவரது இரண்டு கால்களும் செயலிழந்து நடக்க முடியாமல் இருக்கின்ற இந்தச் சூழலில், சாதகமாக வாதாட வேண்டும் என்று பொய்யுரைத்து, அவரது கை ரேகையைப் பெற்று, மற்றொரு குடும்பத்தினர் இந்தச் சத்திரம் எங்களுக்குரியது என்று ஒரு பொய்யான முறையீட்டை தயார் செய்து கொடுத்து, அறநிலையத் துறையின் இணை ஆணையர் இத்தனை வருடங்கள் நீங்கள் பயன்படுத்திய கட்டபொம்மன் சத்திரத்தில் மண்டகப்படி நடத்தக் கூடாது. அருகில் உள்ள சிவன் கோயிலில் சொருபத்தை வைத்து எடுத்துச் செல்லலாம் என்றும்,

ஒன்பது கம்பளங்களைச் சார்ந்த ஒட்டுமொத்த மக்களும் மிகவும் புண்பட்டு, பல நூறு ஆண்டுகள் நாங்கள் பயன்படுத்தி வந்த, திருச்செந்தூரில் முதலில் கட்டப்பட்ட இந்த கட்டபொம்மன் சத்திரத்தில் இந்த வருடம் நாங்கள் நுழையக் கூடாது என்றும் ஆணை பிறப்பித்திருக்கிறார்கள்.

இந்த ஆணையை இரத்து செய்துவிட்டு, வழக்கம் போல 9 ஆம் நாள் மண்டகப்படி கட்டபொம்மன் சத்திரத்தில் நடைபெறுவதற்கு உதவ வேண்டும் என்று கட்டபொம்மன் நேரடி வாரிசு வீமராஜா அவர்கள் எனக்கு கடிதமும் அனுப்பி, அலைபேசி வழியாகவும் தெரிவித்தார். அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் கேட்டுக் கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து நான் ஒரு முறையீட்டைத் தயார் செய்து மாண்புமி முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தேன். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் இத்தகவலை கூறினீர்களா? என்று முதல்வர் கேட்டார். இல்லை, உங்களிடம்தான் தெரிவிக்கிறேன் என்றேன்.

உடனடியாக தனது தனிச் செயலாளரை அழைத்து, அமைச்சர் சேகர்பாபுவிடம் உடனடியாகத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுங்கச் சொல்லுங்கள் என்றார்.

வருகின்ற 3 ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஒவ்வொரு மண்டகப் படியாகச் சென்றுவிட்டு, சொருபத்தைக் கொண்டு வருவார்கள். கட்டபொம்மன் மண்டகப்படிதாரர்கள் மிகவும் கவலையில் இருக்கிறார்கள். அறநிலையத்துறை அமைச்சர் மூலமாக இணை ஆணையர் ஆணையை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை. அநேகமாக அது நிறைவேறும் என்றுதான் நான் நம்புகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.