முத்துக்குமரன் கொலை-குவைத் நாட்டிற்கான இந்தியத் தூதருக்கு வைகோ கடிதம்

குவைத்தில் இறந்த முத்துக்குமரனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், இறப்பிற்கு உரிய நீதி விசாரணை செய்யவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக குவைத்துக்கான இந்தியத் தூதருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.…

குவைத்தில் இறந்த முத்துக்குமரனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், இறப்பிற்கு உரிய நீதி விசாரணை செய்யவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக குவைத்துக்கான இந்தியத் தூதருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், லட்சுமாங்குடி கிராமத்தை சேர்ந்த ஆர்.முத்துக்குமரன் என்பவர் தனது பிழைப்புக்காக, 3 ம் தேதி அன்று, குவைத் நாட்டிற்குச் சென்று உள்ளார். ஆர்.முத்துக்குமரனுக்கு விசா அனுப்பி வைத்த குவைத்தைச் சேர்ந்தவர் 7ம் தேதி, அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

இந்தத் தகவல் 9ம் தேதி பிற்பகல் 4 மணியளவில், அவரது மனைவி மு.வித்யாவுக்கு தெரிந்ததோடு, அந்தத் தகவல் உண்மை எனவும் உறுதி செய்யப்பட்டது.

முத்துக்குமரன் வெளிநாட்டுக்குச் செல்வது இதுவே முதன்முறை ஆகும். எந்த முன்பகையும் இல்லாத சூழலில், தனது கணவரை கொலை செய்த நபருக்கு உரிய தண்டனை வாங்கித் தரவும், தனது குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தரவும், தனது கணவரின் சடலத்தை தமிழகத்திற்கு கொண்டு வரவும் உதவிடுமாறு, வித்யா 10ம் தேதி அன்று வைகோவிற்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதினார்.

தகவல் அறிந்த வைகோ,  இதுதொடர்பாக, 14ம் தேதி வெளியுறவுத் துறைக்கும், குவைத் தூதரக அதிகாரிகளுக்கும் நிலமையை விளக்கி அவசர மின்னஞ்சல் கடிதம் அனுப்பினார்.

வைகோ எம்.பியின் கோரிக்கையை ஏற்று, பதில் அளித்த குவைத் நாட்டிற்கான இந்தியத் தூதர், இந்த வழக்கில் நியாயமான விசாரணையை மேற்கொள்ள குவைத் வெளியுறவுத் துறை அமைச்சகத்தை அணுகியுள்ளோம் எனவும், தனிப்பட்ட முறையில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியுள்ளோம் எனவும், இறந்தவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும், மறைந்த முத்துக்குமரன் அவர்களின் உடல்  15ம் தேதி அன்று மதியம் 02.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வந்து அடையும் எனவும் தெரிவித்து இருந்தார்.

தனது மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சென்ற முத்துக்குமரனின்  குடும்பத்திற்கு, உரிய நீதி கிடைக்கவும், இழப்பீடும் வழங்வும், அதற்கு உரிய விசாரணையை மேற்கொள்ளவும் வைகோ விடுத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு, முதற்கட்ட விசாரணை  தொடங்கப்பட்டு உள்ளது என்று அந்த அறிக்கையில் துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.