நிர்ணயித்த அளவை விட கூடுதல் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கிவருவதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஜி.ஆர். நகரில், மழை கால சிறப்பு மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம்கள், 75 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
நிர்ணயித்த அளவை விட கூடுதல் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கிவருவதாகவும் அவர் சொன்னார்.
சென்னையில் 3 ஆயிரத்து 400 களப்பணியாளர்கள் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







