வடகிழக்குப் பருவமழை துவங்கவுள்ள நிலையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவமழைக் காலங்களில் ஆங்காங்கே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்றுவது, தெருக்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்துவது, வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்வது, பருவமழை துவங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை ஒரு மாநில அரசின் முக்கிய கடமைகளாகும்.
இதற்கேற்ப வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செப்டம்பர் 26ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், கடந்த ஆண்டு பெருமழை காரணமாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், இந்த ஆண்டு அதுபோன்ற நிலைமை ஏற்படக்கூடாது என்றும், வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படுவதாகவும், முக்கிய கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்து, இந்த ஆண்டு மழை நீர் தேங்காது என்று ஓரளவு எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த ஒரு மணி நேர மழையில் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இந்த மழைக்கும் வழக்கம்போல பாதிக்கப்படும் பகுதிகளான கோடம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, கிண்டி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், ராயபுரம், பிராட்வே உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாமல் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், மின் வாரியப் பணிகள், குடிநீர் வடிகால் வாரியப் பணிகள் என பல்வேறு பணிகளுக்காக சென்னை முழுவதும் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இதுவும் மழைநீர் தேங்குவதற்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் ஒரு காரணமாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கான பணிகள் இன்னமும் துவங்கப்படவில்லை. எனவே, இந்த ஆண்டும் பேருந்து நிலையங்கள் குளமாக காட்சியளிப்பது தவிர்க்க முடியாது. ஒருமணி நேர மழைக்கே இந்த நிலை என்றால் வடகிழக்குப் பருவமழை காலத்தின்போது தொடர்ந்து மழைப் பொழிவு ஏற்பட்டால் நிலைமை என்னாகுமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்துபோயுள்ளனர்.
இருதினங்களுக்கு முன்பு பெய்த மழையை அடுத்து வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் நேற்று ஆய்வு செய்து, அக்டோபர் மாதத்திற்குள் வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இருப்பினும் இந்த வெள்ளத் தடுப்புப் பணிகள் வடகிழக்குப் பருவமழை துவங்கும் முன் முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் அந்த அளவுக்கு இருக்கிறது.
எனவே, முதல்வர் இதில் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி வெள்ளத் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், பருவ மழையின்போது ஆங்காங்கே தோண்டப்பட்டிருக்கும் பள்ளங்களைச் சுற்றி வைக்கப்பட்டு இருக்கும் தடுப்புகளை கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா









