ஒரு சமூகத்தின் பெயரை வைத்து மாணவர்களின் தரத்தை மதிப்பிடுவதாகச் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ் துறைத் தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் துறைத் தலைவராக பணியாற்றி வரும் அனுராதா, தனது துறை மாணவர்களிடம் தொலைப்பேசியில் பேசிய ஆடியோவில் சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் விதமாகப் பேசியுள்ளார். அந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், முகத்தைப் பார்த்தாலே பிசி-யா எம்பிசி-யா அல்லது எஸ்சி-யா எனத் தெரிந்துவிடும் எனக் கூறியதுடன். நீ என்ன கம்யூனிட்டி என்பது கூட எனக்குத் தெரியாது, நீ என்ன கம்யூனிட்டி எனக் கேட்டுள்ளார். மேலும், தமிழ் துறை மாணவர்களின் குறிப்பிட்ட சிலரின் பெயரை உச்சரித்த அவர், அவர்களின் கம்யூனிட்டி என்ன எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாணவர்கள் மத்தியில், சாதிய பாகுபாடுகளை உண்டாக்கும் நோக்கில் தமிழ் துறைத் தலைவர் அனுராதா பேசியுள்ள இந்த ஆடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த ஆண்டும் சாதிய பாகுபாடு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ் துறைத் தலைவர் அனுராதா இதேபோல் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக தமிழ் துறைத் தலைவர் அனுராதாவைக் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா கல்லூரிக்கு பணிமாற்றம் செய்தபோது அவர் நீதிமன்றத்தில் தடைபெற்று சென்னை பச்சையப்பன் கல்லூரியிலேயே பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.








