26.1 C
Chennai
November 29, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமான அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும்’

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமான அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் அமைதியான முறையில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வந்தனர். அப்போது ஆட்சியிலிருந்த அஇஅதிமுக அரசு பொதுமக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தது. இந்நிலையில், 2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியரிடம் அமைதியான முறையில் முறையிடச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டினால் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த படுகொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது எனக் குறிப்பிட்டுள்ள அவர்,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இச்சம்பவத்தைக் கண்டித்தும், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உட்பட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியது. ஆனால், அன்றைய அஇஅதிமுக அரசு குற்றமிழைத்த போலீசார் மீது ஒரு சிறு நடவடிக்கை கூட எடுக்காமல் மறுத்து வந்தது எனத் தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை 2022 மே மாதம் 18-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால், இதுவரையில் தமிழ்நாடு அரசு அந்த அறிக்கையை வெளியிடவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகப் பல முக்கிய விசயங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. வெளிவந்துள்ள அந்த செய்திகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொடர்ச்சியாகச் சொல்லி வந்த ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், சட்டத்தைப் பின்பற்றாமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் காவல்துறையினர் வன்மத்தோடு பொதுமக்களைச் சுட்டுக் கொன்றுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர்,

அந்த செய்தியில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கையாளாமல், மறைந்து கொண்டு திட்டமிட்டுக் குறி பார்த்துச் சுடக் கூடிய துப்பாக்கிகளைப் பயன்படுத்தி பொதுமக்களைக் குருவிகளைச் சுடுவதைப் போல் சுட்டுக் கொன்றுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தடுக்கவே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறும் வாதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. கலவரத்தில் எந்த ஒரு போலீஸ்காரருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீசார் வரம்புகளை மீறிச் செயல்பட்டுள்ளனர். இச்சம்பவத்திற்குக் காரணமான அப்போதைய ஐஜி, டிஐஜி, எஸ்.பி அதிகாரி உள்பட 17 பேர் மீதும், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக இருந்த அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? – அமைச்சர் சிவசங்கர் பதில்’

மேலும், நீதி விசாரணையின் முழு அறிக்கையையும் ஆய்வு செய்த பிறகே அவ்வறிக்கை சம்பந்தமாகத் தெளிவான கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என்ற போதிலும், தற்போது அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக வந்துள்ள செய்திகள் ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்பட பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டியவை உண்மை என்பதை உறுதி செய்துள்ளது. அதேசமயம், இச்சம்பவத்திற்கும், ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கும் எவ்வித சம்பந்தமில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாகச் செய்திகள் உள்ளன. இதுமட்டுமின்றி நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான உத்தரவினை களத்தில் இருக்கக் கூடிய அதிகாரிகள் மட்டுமே செய்ய முடியுமா என்பதும், அரசின் உயர்மட்ட அதிகாரத்திலிருந்தவர்கள் சம்பந்தமில்லாமல் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க முடியுமா? போன்ற கேள்விகளுக்கு விடையில்லாமல் உள்ளது. தமிழ்நாடு அரசும் அந்த அறிக்கையை வெளியிடுவதற்குத் தாமதப்படுத்துவதானது மேலும், மேலும் குழப்பங்களையும், பல்வேறு சந்தேகங்களையும் உருவாக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இனியும் கால தாமதம் செய்யாமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக நீதியரசர் அருணா ஜெகதீசன் சமர்ப்பித்துள்ள முழு அறிக்கையினை உடனடியாக வெளியிட்டு, குற்றமிழைத்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துவதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy