தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்தில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற பல வீரர், வீராங்கனைகளின் வரலாறு அறியப்படாமல் உள்ளதாகவும், அவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் கடமை நமக்கு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
துணைவேந்தர்கள் அனைவரும் தங்கள் பல்கலைக்கழக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
தியாகிகளின் பங்களிப்புகளை ஆவணப்படுத்த 5 சிறப்பு ஆராய்ச்சி மாணவர்களை நியமிக்க வேண்டும் என விரும்புவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஆராய்ச்சி திட்டத்துக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் சிறப்பாக செயல்படும் மாணவர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.







