உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 1,188 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தை ஆரம்பித்து மாவட்டங்களுக்குச் சென்று மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி 100 நாட்களுக்குள் குறை தீர்க்கபடும் என உறுதியளித்தார். அதற்காக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறை உருவாக்கப்பட்டது. அந்த துறை மூலமாக பெறப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 1594 மனுக்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு வந்தன. இந்த மனுக்களில் 244 மனுக்கள் நீதிமன்றம் மற்றும் வேறு துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய காரணத்தினால் சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், காவல்துறைக்கு வந்த 1350 மனுக்களில் நேற்று வரை 938 மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், தீர்வு காணப்பட்டுள்ள மனுக்களில் 291 மனுக்கள் கொடுக்கல் வாங்கல் தகராறு, 278 மனுக்கள் சொத்து தகராறு, 70 மனுக்கள் சட்டவிரோத நடவடிக்கையை தடுத்த நிறுத்தவும், 51 மனுக்கள் காவல் நிலைய சேவைகள் வேண்டியும், 58 மனுக்கள் குடும்ப தகராறு, இதர காரணங்களுக்காக 190 மனுக்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மீதமுள்ள 412 மனுக்கள் மீது உடனே விசாரணை நடத்தி தீர்வு காண டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்ற போது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மூலம் பெறப்பட்ட மனுக்களை 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.






