புதுச்சேரியில் கர்ப்பிணி மருமகள் உயிரை மாய்த்துக் கொண்ட சோகத்தைத் தாங்காமல் மாமியாரும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி திருபுவனை அடுத்த சன்னியாசி குப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச்
சேர்ந்தவர் ஆனந்த். இவர் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவரை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சந்தியா செவிலியராக பணிபுரிந்து வந்தார். திருமணத்துக்குப் பிறகு ஆனந்த் தனது மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளி ஆகியோருடன் சன்னியாசிகுப்பத்தில் வசித்து வந்தனர். தற்போது சந்தியா 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், குடும்ப பிரச்சினை தொடர்பாக சந்தியாவுக்கும், மாமியார் அன்னக்கிளிக்கும் இடையே அடிக்கடி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் மனவருத்தமடைந்த சந்தியா, நேற்று வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
மனைவி தூக்கிட்டதைக் கண்டு ஆனந்த் அதிர்ச்சி அடைந்து, மனைவி பிரிந்த துக்கத்தைத் தாங்காமல் அவரும் அதே அறையில் சேலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். இதைப் பார்த்த அன்னக்கிளி கூச்சல் போட்டுள்ளார், உடனே அக்கம் பக்கத்தில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்த்துக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,இதற்கிடையே மருமகள் இறந்த துக்கம் தாங்காமலும், மகனும் உயிரிழப்புகு முயன்ற சம்பவத்தாலும் மனமுடைந்து போன அன்னக்கிளியும் வீட்டில் சேலையால்
தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய உறவினர்கள், வீட்டில் வந்து பார்த்த போது அன்னக்கிளி தூக்கில் இறந்த நிலையில் இருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
இதுகுறித்து தகவலறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் புதுச்சேரி
கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சினையில்
மருமகள், மாமியார் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சன்னியாசிகுப்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.








