இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் பாஸ்போர்ட் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் உட்பட மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தில் மூத்த கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் வீரபுத்திரன் என்பவர் சட்டவிரோதமாக பணம் பெற்றுக் கொண்டு பாஸ்போர்ட் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சிபிஐ இந்த புகார் தொடர்பாக ரகசியமாக நடத்திய விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த நபர்களுக்கு இந்தியர்கள் என சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்க மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூத்த கண்காணிப்பாளர் வீரபத்திரன், டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் ரமேஷ் என்பவரின் துணையுடன் 45 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூத்த கண்காணிப்பாளர் வீரபுத்திரன் மற்றும் முகவர் ரமேஷ் மற்றும் பாஸ்போர்ட் வாங்கியவர் என மூன்று பேர் மீது மதுரை சிபிஐ மூன்று பிரின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரியே பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







