புதுச்சேரியில் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிந்த ஆத்திரத்தில் மண்டப உரிமையாளரை தாக்கியவர்களை சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கு புதுச்சேரி – கடலூர் சாலையில் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்நிலையில் அவர் திருமண மண்டபத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த சிலர் ரங்கநாதனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து அவர் தவளகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் நான்கு பேர் ரங்கநாதனை தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதன் மூலம் விசாரணை நடத்திய போலீசார், சிங்கிரிகோயில் பகுதியை சேர்ந்த மகேஷ், பிரசாந்த், உதயா, பிரவின் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையின்போது, தங்களது நண்பருடைய குழந்தையின் பிறந்த நாள் விழாவை திருமண மண்டபத்தில் கொண்டாடியபோது அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிந்திருந்ததாகவும் இதனால் மண்டப உரிமையாளர் ரங்கநாதனை தாக்கியதாகவும் தெரிவித்தனர்.







