கடுமையான காலத்தில் உக்ரைன் பிரதமர் விளாடிமிர் செலன்ஸ்கியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசிய இந்திய பிரதமர் மோடிக்கு உக்ரைனை சேர்ந்த இளம் எம்.பி, நன்றி தெரிவித்துள்ளார் .
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனால் உக்ரைனில் தங்கியிருக்கும் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த மாணவர்களும் அடக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மாணவர்களை அழைத்து வந்து பின்னர் விமான மூலமாக தாயகம் மீட்டுவரும் நடவடிக்கை மத்திய அரசால் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையே நிலவும் போரை நிறுத்த பல உலக நாடுகள் வலியுறுத்திவரும் நிலையிக் இந்திய பிரதமரும் இரு நாட்டு பிரதமர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசி வருகிறார்.
அந்த வகையில் 2 நாட்களுக்கு முன்பு, உக்ரைன் பிரதமர் விளாடிமிர் செலன்ஸ்கியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பிரதமர் மோடி பேசினார். அங்கிருக்கும் மாணவர்களின் நிலை, போர் சூழல் குறித்து 35 நிமிடங்கள் வரை அந்த உரையாடல் நீண்டது. இதற்கு உக்ரைனை சேர்ந்த இளைய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வியாடோஸ்லாவ் யுராஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் நேர்காணல் ஒன்றில் பேசிய ஸ்வியாடோஸ்லாவ் யுராஷ், ரஷ்யாவுடன் இந்தியா நல்ல நட்புடன் இருந்தாலும், உக்ரைன் பிரதமரை அழைத்து நம்பிக்கையூட்டும் விதமாக பேசியதற்கு நன்றி என்று பேசினார்.
இந்த நூற்றாண்டின் விதியை தீர்மாணிக்கும் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா முக்கியமான நாடு. மனிதநேயத்துடன் உக்ரைனை அணுகும் இந்தியாவின் முன்னெடுப்புகளுக்கு நன்றி. மனிதநேயத்தை வளர்ப்பதில் இந்தியாவின் பங்கு அளப்பறியது என்று பேசினார். தொடர்ந்து, ரஷ்யா தனது தாக்குதலை நடத்திக்கொண்டே இருந்தால் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள நாங்களும் போரை தொடர்ந்து எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம் என்று பேசினார்.