உத்தர பிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஆய்வுக் குழு அமைக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் ”70 ஆண்டுக்கால சுதந்திர இந்தியாவில் நவீனத் தொழில்நுட்பங்கள் இருந்தும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைத் தீர்க்க முடியாதது அரசின் இயலாமையைக் காட்டுகிறது” எனக் கடுமையாகச் சாடியுள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்த பொது நல வழக்கு ஒன்று 27ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் சித்தார்த்த வர்மா மற்றும் அஜித் குமார் கொண்ட அமர்வு உத்தர பிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகம் காணப்படும் நகரங்களில் தனிக் குழு அமைத்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
மேலும் லக்னோ, பிரயாக்ராஜ், வாரனாசி, கான்பூர் நகர், ஆக்ரா, கோரக்பூர், காசியாபாத், கௌதம புத்தர் நகர் மற்றும் ஜான்சி மாவட்ட நீதிபதிகள் இந்த குழுவின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. அரசு தரப்பிலிருந்து மருத்துவமனைகளில் இருக்கும் வசதிகள் மற்றும் கொரோனாவால் நிகழும் மரணங்கள் குறித்த விவரங்களை இக்குழுவிற்குத் தெரிவிக்க வேண்டும்.
தொடர்ந்து கொரோனா பரவலுக்கான காரணங்கள் குறித்து விசாரித்த நீதிபதிகள் கடைசிக்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளது. இதுவரை நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதது ஏன் எனத் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இது குறித்து மே 3 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







