இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் உதவவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்டி வருகின்றன.
முன்னதாக அமெரிக்காவின் கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவிற்கு உதவுவதாக உறுதியளித்திருந்தனர். தற்போது அந்த வரிசையில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் இணைந்துள்ளது. இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் “இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் துணை நிற்கிறோம் என்றும், இந்தியாவிற்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக” தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு உதவுவதாக உறுதியளித்த கூகுள் நிறுவனம் ரூ. 135 கோடி நிதி வழங்குவதாகவும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை வாங்க உதவுவதாகவும் உறுதியளித்துள்ளனர். ஆப்பிள் நிறுவனம் எந்த மாதிரியான உதவிகளைச் செய்து தருகிறது என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 2,01,187 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







