உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. மேலும் அவருடைய அலுவல் பணிகள் நேற்று முன்தினத்துடன் முடித்து வைக்கப்பட்டன. தனக்கு அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை கடந்த மாதம் 11ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, டி.ஒய்.சந்திரசூட்டை தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கடந்த மாதம் 17-ந்தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் உச்சநீதி மன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பொறுப்பேற்றார். டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் அவருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
1959-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி பிறந்தவரான சந்திரசூட், கடந்த 2016-ம் ஆண்டு மே 13-ந்தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். இவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீடிப்பார். அதாவது 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி வரை பொறுப்பு வகிப்பார்.
புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று இருக்கும் டி.ஒய்.சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி.சந்திரசூட்டும் இந்திய தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் ஆவார். மிக நீண்டகாலம் இப்பதவியை அலங்கரித்தவர் என்ற பெருமை பெற்ற அவர், 1978-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி முதல், 1985-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி வரை இந்த உச்ச பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







