தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
தவெக சார்பில் 234 தொகுதிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்கள். இந்த பட்டியலில் 30-க்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்களும் இடம் பெற இருக்கிறார்கள். இதற்கான நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார்.
இதனிடையே சென்னை பெரம்பூரில் இருந்து நாளை முதல் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்காக பெரம்பூரில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பிரச்சாரம் நடைபெற வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு குறித்து தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







