2வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறியதால் கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனியார் மில்லில் வேலை செய்து வந்த பிரபுவுக்கும், அவரது மனைவி உமா மகேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் மனைவி உமா மகேஸ்வரி, தனது கணவர் பிரபுவை வெட்டிப்படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக உமா மகேஸ்வரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இக்கொலை வழக்கில் போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. சம்பவத்தின் போது பிரபு மதுபோதையில் இருந்ததாகவும், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறியதாகவும் அதன் காரணமாகவே, கணவர் பிரபுவை கொலை செய்ததாகவும் உமா மகேஸ்வரி, வாக்குமூலம் அளித்துள்ளார்.







