நிலநடுக்கத்தால் 5 மீட்டர் வரை நகர்ந்த துருக்கி – விஞ்ஞானிகள் தகவல்

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக துருக்கி 5 மீட்டர் வரை நகர்ந்து இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக துருக்கி 5 மீட்டர் வரை நகர்ந்து இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. அதை தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதனால் துருக்கி நகரமே உருக்குலைந்து போனது.  இதுவரை இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19,300ஐ கடந்துள்ளது. இருநாட்டிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் நிலநடுக்க அறிவியலாளரும் இத்தாலிய நாட்டு பேராசிரியருமான கார்லோ டாக்லியோனி இந்த நிலநடுக்கம் குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது டெக்டானிக் தட்டு பகுதிகளில் துருக்கி நாடு அமைந்துள்ளது. இந்த தட்டுகளிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக துருக்கி நாடு 5 முதல் 6 மீட்டர் வரை நகர்ந்து இருக்கக்கூடும் என கார்லோ டாக்லியோனி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அராபிக்கா தட்டுடன் தென்மேற்கு பகுதியை நோக்கி அண்டோலியன் தட்டு நகர்ந்ததன் விளைவாக இந்த அதிதீவிரமான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் குறிப்பாக துருக்கியின் நிலப்பரப்புக்கு கீழே ஒரு தட்டு மேற்கு நோக்கியும் மற்றொரு தட்டு கிழக்கு நோக்கியும் நகர்ந்ததால் மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கார்லோ டாக்லியோனி கூறியுள்ளார்.

தற்போது நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் ஏற்கெனவே பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஜனவரி 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.