இரண்டு கைகளையும் விட்டு ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய வீடியோவை யூ டியூபர் TTF வாசன் பதிவேற்றம் செய்துள்ளார். காவல்துறைக்கு சவால் விடும் வகையில் அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவையை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் தன்னுடைய அதிவேக பைக்கில் 140 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்று, அதை தனது செல்போனில் லைவ் வீடியோவாக எடுப்பது வாடிக்கை. போக்குவரத்து விதிகளில் புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வந்து அபராத தொகையை பலமடங்காக அதிகரித்து பல ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் டிடிஎப் வாசன் மட்டும் ஏனோ இந்த போக்குவரத்து விதிகளுக்கு அப்பாற்பட்டவராகவே தன்னை கருதிக்கொண்டு அதிவேக பயணம் மேற்கொண்டு சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாகவே வைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விழுப்புரம் அருகே தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது டிடிஎப் வாசனை ஏராளமான இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்து குவிந்ததோடு, விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தடியடி நடத்தி போலீசார் இளைஞர்களை கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “காவல்துறை எனக்கு விரைவில் சல்யூட் அடிக்கும் காலம் வரும்” என்று காவல்துறைக்கு சவால் விடுத்து டிடிஎப் வாசன் பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெளிப்படையாக சவால் விட்டும் காவல்துறை இதைப்பற்றி கவலைப்படவில்லை.
இந்நிலையில் டிடிஎப் வாசன் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ மீண்டும் பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
அந்த வீடியோ பதிவில், “தனது அதிவேக பைக்கில் செல்லும் டிடிஎப் வாசன் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் பெண்ணிடம், பேசிக் கொண்டு 2 கைகளை விட்டு விட்டு டிடிஎப் வாசன் ஆபத்தான முறையில் பைக்கை ஓட்டிச் செல்லும் வீடியோவை பதிவிட்டுள்ளார். பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண் அலறியபடி, “ஏன் எப்படி சாகசம்ன. இவ்ளோ வேகமா போறீங்க. பயமா இருக்குதே” என அலறுவதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதைப்பற்றி கவலைப்படாமல் சிரித்துக்கொண்டே டிடிஎப் வாசன் பைக் ஓட்டுவது அந்த வீடியோவில் இருக்கிறது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் சென்னை மாநகரின் புறநகர் பகுதியான பூந்தமல்லி – மதுரவாயல் நெடுஞ்சாலையில் நடப்பதாக தெரிகிறது. “போக்குவரத்து விதிகளையும் மதிக்க மாட்டேன், சட்டத்திட்டங்களும் தன்னை கட்டுப்படுத்தாது, எனது சாகசத்தை தொடருவதோடு, இளைஞர்களையும் இதே பாதையில் கொண்டுசெல்வேன்” என காவல்துறைக்கு சவால் விடுவதைப்போல டிடிஎப் வாசன் வீடியோவில் பதிவிட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காவல்துறை இனியாவது நடவடிக்கை எடுத்து தவறான பாதைக்கு இளைஞர்களை வழிநடத்துவதை அரசும், காவல்துறையும் தடுக்குமா? அல்லது இளைஞர்கள் எப்படிப்போனால் என கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களா? என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சென்னையில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது நள்ளிரவில் தங்கள் பைக்குழலில் சாகசங்களில் ஈடுபட்டதை கண்டுபிடித்த சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை 250க்கும் மேற்பட்ட அதிவேக பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதோடு பைக் ரேஸில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை கைது செய்தனர். ஆனால் அதிவேகம் தனது பலம் என கூறி அதிவேகமாக பைக்கில் செல்வதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவரும் டிடிஎப் வாசன் போன்றோர் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் இல்லையே ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.