திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்து கன்னியாகுமரி ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒன்றாம் தேதி இரவு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. வாளாடி ரயில் நிலையம் அருகே சென்றபோது திடிரென பழுதாகி நின்றது. தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ரயிலின் சக்கரத்தில் லாரி டயர்கள் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் விருத்தாச்சலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கு வந்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் சில நாட்களுக்கு முன்பு ஜேசிபி ஓட்டுநர் ஒருவர், ரயில்வே கேட்டிற்கு அருகே ரயில்வே லைன் வயர்களை சேதமக்கியதும் இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் டயர்களை வைத்த சென்ற மர்மநபர்களை தனிப்படைகள் அமைத்து தேடிவருகின்றனர். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா







