தலையில் காயமின்றி மூக்கின் வழியாக அதிநவீன அறுவை சிகிச்சையின் மூலம் மூளைப் பகுதியில் உள்ள கட்டியை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு தலைமை மருத்துவமனை டீன் நேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம், வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் (38). இவருக்கு கடந்த ஒரு வருடமாக தீராத தலைவலி இருந்து வந்துள்ளது. இந்த தலைவலி
காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் தலைவலி குறையாத காரணத்தால் கடந்த மாதம் திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது தலைப் பகுதியான மூளையின் பிட்யூட்டரி பகுதியில் கட்டி இருப்பதை கண்டறிந்தனர்.
உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக காது மூக்கு தொண்டை மருத்துவக் குழுவினர்களான மருத்துவர் சதீஷ்குமார், மருத்துவர் அண்ணாமலை,
மருத்துவர் கோகுல் ஆனந்த் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்
முத்துராமன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரால் நோயாளி ரஜினிகாந்தின் மூக்கின்
வழியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூளைப் பகுதியில் இருந்த கட்டியை முழுவதுமாக அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர் என்றார்.
தற்போது ரஜினிகாந்த் பூரண குணமடைந்து அரசு தலைமை மருத்துவமனை டீன் நேருவுக்கும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்து வீடு
திரும்பி உள்ளார்.








