தீர்ப்பாய சீர்த்திருத்த வழக்கு விவகாரம் : மத்திய அரசு நீதிமன்ற நடைமுறையை மதித்து நடக்க வேண்டும் – செல்வபெருந்தகை வலியுறுத்தல்

தீர்ப்பாய சீர்த்திருத்த வழக்கு விவகாரத்தில் மத்திய அரசு நீதிமன்ற நடைமுறையை மதித்து நடக்க வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

”உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கை, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்கள் தலைமையிலான அமர்விலிருந்து ஐந்து நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்விற்கு மாற்றக் கோரி ஒன்றிய அரசு கடந்த இரு தினங்களுக்கு முன் நள்ளிரவில் மனுத் தாக்கல் செய்தது.

தற்போது அதே வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளது. வழக்கின் இறுதி கட்டத்தில் இவ்வாறு ஒன்றிய பா.ஜ.க. அரசு குளறுபடிகள் செய்வது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மேலும், நீதிமன்ற நடைமுறைகளைக் கடைபிடிக்காமல், நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவது, அதன் மாண்பிற்கும், அடிப்படை ஜனநாயகத்திற்கும் விரோதமாகும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்கள், ‘நான் ஓய்வு பெற்றதற்கு பிறகுதான் சில வழக்குகளை விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என அரசு நினைக்கிறதா? எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக கூறிவிடுங்கள்’ என்று கூறியிருப்பதன் மூலம், இந்த அரசின் நியாயமற்ற நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

தீர்ப்பாய நியமனங்கள் குறித்து முன்வந்துள்ள வழக்கில் நீதித்துறை தன்னிச்சையையும் நியாயத்தையும் காக்கும் முயற்சியில் இருக்கும் வேளையில், ஒன்றிய அரசின் இப்படிப்பட்ட நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தை தகர்க்கும் அபாயகரமான முன்மாதிரியாகும். அதனால், ஒன்றிய அரசு உடனடியாக நீதிமன்ற நடைமுறையை மதித்து, அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.