32.2 C
Chennai
May 14, 2024
தமிழகம் செய்திகள்

திரும்பப்பெறப்பட்ட மலைவாழ் மக்களின் காத்திருப்பு போராட்டம்: 3 நாட்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

உடுமலைப்பேட்டையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த மலைவாழ் மக்களின் காத்திருப்பு போராட்டம் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,  சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
திருப்பூர், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் குளிப்பட்டி, குருமலை, மாவடப்பு, தளிஞ்சி, கோடந்தூர், காட்டுப்பட்டி உள்ளிட்ட 18 மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 3000க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்வி, சாலை, மருத்துவம், குடிநீர், உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர்.
கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவரை, தொட்டில் கட்டி வனப்பகுதியில் இருந்து பல கிலோமீட்டர் தூக்கி வந்து சிகிச்சை பெற்றனர். 2006 வன உரிமைச் சட்டத்தின் படி சாலை வசதி கேட்டு ஏற்கனவே மாவட்ட வன உரிமை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், வனத்துறை சார்பில் தீர்மானத்தில்  கையெழுத்திடாததால் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தது.  தற்போதைய அவசர தேவையை கருதி சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உடுமலையில் அமைந்துள்ள  உடுமலை வன சரக அலுவலகத்தின் முன்பாக மலை கிராம மக்கள் 500க்கும்  மேற்பட்டோர் தங்களது குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு சாலை, குடிநீர், மருத்துவமனை, பள்ளிக்கூடம் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனால் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் பல்வேறு நடைமுறைகளைக் காரணம் காட்டி வனத்துறை அதிகாரிகள் தங்களுக்கு வரும் சலுகைகளை தடுத்து வருவதாக மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டினர்.
2006 வன உரிமை சட்டத்தில் உள்ளது போல் பழங்குடியின மக்களுக்கு சாலை, குடிநீர், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும் வரை தொடர்ந்து மூன்று நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் மாநில மலைவாழ் மக்கள் துணைத்தலைவர் சண்முகம் தலைமையில் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் ,  தளி பேரூராட்சி தலைவர் , துணைத் தலைவர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தனர். பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கைகளை மக்கள் சார்பாக எடுத்துரைத்த போது, பேச்சுவார்த்தை கூட்டம் மாவட்ட வன உரிமை குழு கூட்டமாக மாற்றப்பட்டு சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து தீர்மானம் தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் கடந்த கூட்டத்தில் கையெழுத்திடாத வனத்துறை சார்பிலும் கையெழுத்திடப்பட்டதை அடுத்து , வருவாய்த்துறை  அதிகாரிகள் , மாவட்ட வன உரிமை குழு கூட்ட உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். இதைத்தொடர்ந்து, அரசு விதிகளின்படி சாலை அமைப்பதற்கான அடுத்தகட்ட பணிகள் துவங்கும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் போராட்டக் குழுவினரிடம் உறுதி அளித்தார்.
கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து போராட்டம் திரும்ப பெறப்படுவதாக மலைவாழ் மக்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக மூன்று நாட்களாக நடைபெற்று வந்த காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தர உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் தளி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading